141 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள்: கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் செய்யும். உங்களைப்போன்றவர்கள் இதுபோன்ற முகாம்கள் நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசும்போது,” ஜெய்ப்பூரில் இருந்து இந்த உபகரணங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை அணிவதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1000த்தை ரூ.1500 ஆக உயர்த்தி இருக்கிறார். ரூ.1500 வாங்கியவர்களுக்கு ரூ.2000ஆக உயர்த்தினார். நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவருக்கும் மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.


வீட்டில் ஒருத்தர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வாங்கினாலும் அக்குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு நீங்கள் ஆதார், அடையாள அட்டை போன்றவற்றை பெற்று பயனடையலாம்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி தலைவர் விஜய் சர்மா, செயலர் சரவண் ஜெயின், இணைச் செயலர் கவுஷல் லக்கோகா, பொருளாளர் வருண் தர்கார்க், துணைத்தலைவர் சீதாராம் லெரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
