• June 7, 2025

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு : டி. ஜெயக்குமார் மனு

 அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு : டி. ஜெயக்குமார் மனு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, பொன்முடியின் மகனும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி மற்றும் ஜெயச்சந்திரன், மகேந்திரன், சதானந்தன், குமார், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

,இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் மட்டுமே ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் ராஜ மகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் 3 பெரும் ஆஜராகாதது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை இவ்வழக்கில் அரசு தரப்பின் சாட்சியான ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன்,  ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன் மற்றும் பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி,   நிலஅளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன் என 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் கிருஷ்ணமூர்த்தியை தவிர்த்து மற்ற 5 பேரும் அரசு தரப்புக்கு பாதகமாகவும் அமைச்சர் பொன்முடி க்கு ஆதரவாகவும் சாட்சியளித்துள்ளனர்.

இதில் செம்மண் குவாரியில் தணிக்கை செய்தது தொடர்பாகவும், இவ்வழக்கு சம்பந்தமாகவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என ரமேஷ், கோபாலகண்ணன் உள்ளிட்டவர்கள் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தனர். பின்னர் அவர்களிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். அவரை தொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் ஆனந்தநாராயணன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் இன்றும் நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  அமைச்சர் பொன்முடி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி உள்ளிட்டவரால் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு தொடர்பாக அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *