கையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று (5.9.2023) சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் “சண்டியர் மூர்த்தி” (sandiyar moorthy) என்ற பெயரிலான பக்கத்தில் கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையிலான மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரனுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் உலகநாதன் உட்பட மணியாச்சி உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடம்பூர் தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் கணேச மூர்த்தி (வயது 21) என்பவர் கையில் அரிவாளுடன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
உடனேதனிப்படை போலீசார் ,கணேசமூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
