கோவில்பட்டி மாவட்டம் அறிவிக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் ராமசாமி கொண்டார்.
கோவில்பட்டி ஒற்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமாக இருக்கும்போது கோவில்பட்டி துணை மாவட்டம் அந்தஸ்து பெற்று இருந்தது. கோவில்பட்டி இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் போக்குவரத்து தொடர்பில் உள்ள ஊர் ஆகும். கோவில்பட்டி வர்த்தகம், போக்குவரத்து, விவசாயம், தீப்பெட்டி ஆகிய துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிய ஊராக உள்ளதுடன் தென்மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக உள்ளது.
கோவில்பட்டி கரிசல் மண்ணின் தாயகமாக இருந்து வருகிறது. கோவில்பட்டி யில் நான்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை கொண்டுள்ளது. பல சுதந்திர போராட்ட வீரர்களை தன்னகத்தே கொண்டு விளங்கி வருகிறது. குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை வீரன் அழகுமுத்து கோன், வ. உ. சிதம்பரம்பிள்ளை, பாரதியார், வீரன் சுந்திரலிங்கம் போன்ற எண்ணற்ற வீரர்களை கொடுத்த மண்ணாக உள்ளது.
அத்துடன் கரிசல் மணம் பரப்பும் எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், மற்றும் பருத்தி உற்பத்தியில் தமிழகத்தில் தலை சிறந்து விளங்கி வருகிறது.

பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருப்பதால் கோவில்பட்டியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளை இணைத்து கோவில்பட்டி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தரிடம் மனு அளித்தனர்.
பின்னர் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
