இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அந்தந்த பகுதி திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் திருமணம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சந்திரசேகரன் – ஜேசுதாசன் மகள் நிஷா ஆகியோருக்கும், திரேஸ்புரம் முத்தையா மகன் காளிமுத்து, கொல்லம்பரும்பு சந்திரமேனன் மகள் வசந்தி ஆகிய இரு ஜோடிகளுக்கும் தாலுகா கோவில் ஆய்வாளர் ருக்மணி தலைமையில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
சுப்பிரமணிய பட்டர் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் 2 ஜோடி மணமக்களுக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 2 கிராம் தங்கம் உட்பட சீர்வரிசை பொருட்களை சிவன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி வழங்கினார்
தொடர்ந்து மணமக்களை பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். மேலும், வரும் 11ஆம் தேதி ஏழை – எளிய ஜோடிகளுக்கு திருக்கோயிலில் திருமணங்கள் நடத்திடவும் உத்தரவு வரப்பெற்றுள்ளது. எனவே, தகுதி உள்ளவா்கள் தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரா் திருக்கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.