சாலை விபத்தில் பலி: தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி; முதல்-அமைச்சர் அறிவிப்பு
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
நான்குநேரி சுங்கசாவடி அருகே நேற்று இரவு நடத்த சாலை விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆரைகுளம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த தனியார் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்..
இளம் வயதில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.