நிலவில் இறங்கியது சந்திரயான்: கோவில்பட்டியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நேற்று நிலவில் இறங்கியது. இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன் அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும்.
சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் மகிழ்ச்சியை கொண்டாட வைத்துள்ளது.
கோவில்பட்டி பஸ் நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் தேசியக் கொடியுடன் பாரத பிரதமர் மோடி புகைப்படத்துடன் பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் அம்மன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரஜினி ரசிகர் மன்றம்

கோவில்பட்டி வேலாயுதபுரம் 5வது வார்டு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து தேசியக்கொடியுடன் கூடி கோஷமிட்டனர்.
மேலும் பள்ளிக்குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரஜினி மன்ற நிர்வாகி முருகன் தலைமை தாங்கினார். ஜோதி காமாட்சி இனிப்பு வழங்கினார். பாலமுருகன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
