தூத்துக்குடி மாவட்டத்தில் 14,70, 962 வாக்காளர்கள்; ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியிலின் படி 71,8724 ஆண்கள், 75,2023 பெண்கள் 215 திருநங்கைகள் என மொத்தம் 14,70, 962 வாக்காளர்கள் உள்ளனர். 1619 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கும் பொருட்டு, வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடிகள் வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருப்பின் அவற்றினை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்திடப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் தங்களது சட்டமன்ற தொகுதியின் வரைவு வாக்கு சாவடி பட்டியலினை இன்று 22.08.2023 வெளியிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக அவர்களிடம் கோரிக்கை/கருத்துக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேற்கண்ட வாக்குச்சாவடி மறுவரையறை பணிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தொடர்திருத்தப்பணியில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதும் உள்ள விசாரணை முடித்து அனைத்து மனுக்களையும் முடிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 17.10.2023 அன்று வெளியிடப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்..
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
