கால்கள் செயல் இழந்த டாக்டரின் மருத்துவ சேவை; 10 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கிறார்
நரம்பியல் நோயினால் இரண்டு கால்களும் செயல் இழந்த டாக்டர் ஒருவர், மற்றவர்கள் யாரும் தன்னை போல் பாதிக்ககூடாது என்பதற்காக 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
அவரது பெயர் ஆறுமுகம். கன்னியாகுமரி அருகே தலைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தபிறகு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பு படித்து மூளை நரம்பியல் நிபுணர் ஆனார்.
இவர் குடும்பத்தில் அனைவரும் டாக்டராக இருந்தும் டாக்டர் ஆறுமுகம் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை, திருவனந்தபுரம் என்று அலைந்தார். இறுதியில் அவரது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டன.
அப்படி இருந்தும் டாக்டர் ஆறுமுகம் சோர்வடைந்து விடவில்லை. தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்று எண்ணினார். வீல் சேரில் இருந்தபடி ஏழை, எளியோருக்கு 10 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை திங்கள் நகரில் ஒரு வாடகை வீட்டில் 1992-ம் ஆண்டு தொடங்கி நடத்தினார். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் அவரை தேடி வந்து சிகிச்சை பெற்றனர்.
இதனால் பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் ஆறுமுகத்தை நாடி, தங்கள் மருத்துவமனைக்கு வந்து பணியாற்றுங்கள் என்று வலை விரித்தனர். ஆனால் அவற்றை நிராகரித்து விட்ட ஆறுமுகம் தொடர்ந்து 10 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்.
மேலும் ஆறுமுகம் தனியாக மருத்துவமனை தொடங்கலாம் என்று வங்கியில் கடன் உதவி பெற நாடினார். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நீங்கள் எப்படி கடன் தொகையை திரும்ப தருவீர்கள் என்று கேட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அந்த சமயத்தில் ஆறுமுகத்தின் தந்தை நமது சொந்த ஊரில் உள்ள இடத்தில் மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். இதற்கிடையே வங்கியும் கடன் வழங்கியது.
இதை தொடர்ந்து தலைக்குளம் கிராமத்தில் டாக்டர் ஆறுமுகம், பி.எஸ்.,மெமோரியல் டிரஸ்ட் என்றபெயரில் மருத்துவமனையை தொடங்கினார். அங்கு 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். உள் நோயாளிகள் பிரிவும் உள்ளது. ஏழை, எளியோருக்கு உணவு மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கி சேவை ஆற்றி வருகிறார். மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டுக்கும் சக்கர நாற்காலியில் சென்று நோயாளிகளை பார்த்து சிகிச்சை அளிக்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்புபவர்கள், என்னை பார்த்து “ நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் என்று வாழ்த்துவது தான் எனக்கு பெரிய வருமானம் “ என்கிறார் டாக்டர் ஆறுமுகம்