தூத்துக்குடி போலீஸ் ஆயுத கிடங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (19.8.2023) காலை திடீர் விசிட் மேற்கொண்டார். ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் ஆயுத கிடங்கை பார்வையிட்டு ஆயுதங்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆயுதப்படை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
மேலும் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, ஏதாவது குறைகள் இருந்தால் தன்னை நேரடியாக சந்தித்து எந்த நேரத்திலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார். மேலும் காவலர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பார்வையிட்டு காவலர்களுடன் சிறிது நேரம் கைப்பந்து விளையாடினார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களிடம் எவ்வளவு பணிகள் இருந்தாலும் உடற்பயிற்சி மிக முக்கியமானது, தினமும் இயன்றளவு உடற்பயிற்சி செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒய்வு நேரங்களில் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், காவல் நிலையங்களை நாடி வரும் பொது மக்களிடம் கனிவான முறையில் நடந்து, அவர்களின் புகார்களை கேட்டறிந்து, உயரதிகாரிகளின் அறிவுரைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் கூறினார்.
