கோவில்பட்டியில் வீட்டை இடிக்கும்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி பலி

கோவில்பட்டி புதுரோடு பகுதியை சேர்;ந்தவர் சுப்பையா. இவருக்கு கோவில்பட்டி தாமஸ் நகரில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக பழைய வீட்டை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வீட்டை இடிக்கும் பணியில் ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 38) என்பவர் இன்று காலையில் இருந்து ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் மேற்பகுதியை ட்ரில்லிங் மிஷன் வைத்து இடித்து கொண்டு இருக்கும் போது திடீரென மேற்பகுதி இடிந்து உள்ளே விழுந்துவிட்டது,.
இதில் மணிகண்டனும் உள்ளே விழுந்து விட்டார். அப்போது சுற்று பகுதி சுவரும் இடிந்து விழ மணிகண்டன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து மயக்கமடைந்தார். இதையெடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி மணிகண்டனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மணிகண்டன் உடலை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மணிகண்டன் இறந்த செய்தி அறிந்து மருத்துவமனையில் குடும்பத்தினர் மற்றும் உறவினார்கள் கூடினர். அவர்கள் அழுதபடி இருந்தனர், இந்த காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.
