கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதி : மாட்டு வண்டி சர்வீஸ் நடத்தி த.மா.கா.வினர் நூதன போராட்டம்

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பினால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த பஸ் நிலையத்தின் வெளியேயும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதையும் அதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதையும் பார்த்து இருப்பீர்கள்.
கூடுதல் பஸ் நிலையம், நகருக்கு வெளியே பை-பாஸ் சாலையில் உள்ளது. அங்கிருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு பஸ் விடப்படும் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறையில் அது இல்லை. மேலும் இரவு நேரங்களில் நீண்ட தூர வெளியூர் பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்குவருவதில்லை. கூடுதல் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று செல்கின்றன. இதனால் ங்கிருந்து ஊருக்குள் வருவதற்கு ஆட்டோ டிரைவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்து வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த கட்டணம் இரு மடங்காக அதிகரித்து விடும்.
இப்படியாக கோவில்பட்டி மக்களின் மன உளைச்சலுக்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும்வேளையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை இன்று காலை மாட்டு வண்டி சர்வீஸ் இயக்கப்படும், அதில் பயணிகள ஏறிக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் நகர செயலாளர் கே.பி.ராஜகோபால் அறிவித்து இருந்தார்,
அதன்படி இன்று காலை கதிரேசன் கோவில் சாலையில் இருந்து ஏ. கே. எஸ். தியேட்டர் ரோடு வழியாக இரட்டை மாட்டு வண்டியுடன் அண்ணா பஸ் நிலையம் நோக்கி த.மா.கா. நகர செயலாளர் கே.பி.ராஜகோபால் மற்றும் சில நிர்வாகிகள் புறப்பட்டு வந்தனர்.
அவர்களை பிரதான சந்திப்பில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் க.செந்தில்குமார் தடுத்து நிறுத்தி, போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. எனவே, போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள், மாட்டு வண்டியை விட்டு இறங்கி, அங்கேயே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா நகரத்தலைவர் கே.பி.ராஜகோபால், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி, இளைஞரணியை சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து, ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இதனால் பிரதான சாலையில் இருந்து ஏ.கே.எஸ்.தியேட்டர் சாலை திரும்பும் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைதானவர்கள்சிறிது நேரம் கழித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
