கோவில்பட்டி ஐ.சி.எம். பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா
சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
கோவில்பட்டியில் சில பள்ளிகளில் இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும்,இயற்கை வளங்களையும்,சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும்,புலி மற்றும் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு உதவிடவும்,புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கையில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் என்ஜினியர் நடராஜன் தலைமை தாங்கினார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ராதா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வனச்சரக வனவர் பிரசன்னா கலந்து கொண்டு உலக புலிகள் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சவுந்தர பாண்டியன், பள்ளி ஆசிரியர்கள் அபிலாதி ரேஸ்,சுப்புலட்சுமி,பத்மாவதி,செல்லம்மாள், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.\