• June 9, 2025

நாலாட்டின்புதூர் பகுதியில் முறையற்ற உரிமத்துடன் விற்பனை: 1330 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

 நாலாட்டின்புதூர் பகுதியில் முறையற்ற உரிமத்துடன் விற்பனை: 1330 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன்  தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவில்பட்டி நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

நாலாட்டின்புதூர் பகுதியில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துகொண்டிருந்த வாகனத்தை ஆய்வு செய்தபொழுது, வாகனத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், தண்ணீர் அடிப்படையிலான பானம் என்ற பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டும் பாட்டிலில் அடைத்து, பி.ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ) சான்றிதழும், உரிய லேபிள் விபரங்களுமின்றி இருந்ததும் கண்டறியப்பட்டது.

எஇதனால் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வாகனமும், 1330 லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரும் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோல, கழுகுமலை பகுதியில் வேல்கொடி பார் என்ற டாஸ்மாக் கடையுடன் இணைந்த பாரில் ஏற்கனவே பயன்படுத்திய பாட்டிலில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்ததும், அச்சிட்ட காகிதங்களையும், அனுமதியற்ற பிளாஸ்டிக் டம்பளர்களையும் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வைத்திருந்ததால், பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதாரமற்ற வகையில் உணவுப் பொருள் வைத்திருந்ததால், அவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகளின் கீழும் அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்கால ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்குற்றத்திற்காக அந்த பாரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ உணவு வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால் உணவு பாதுகாப்புத் துறையால் உணவு வணிக நிறுவனம் மூடப்படும் என்பதுடன், 5 லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்தார்.

நுகர்வோர்களும் வணிகர்களும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரையும், FSSAI உரிம எண்ணும் உள்ளது என்று கவனித்துப் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொண்டார்.

உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்றும் கூறி உள்ளார்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *