மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் 20-ம் தேதி முதல் வினியோகம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்வருமாறு:-
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், உரிமைத் தொகை வழங்கும் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், பூா்த்தி செய்த படிவங்களை முகாம்களுக்கு வந்து அளிப்பதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட உள்ளன. வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் அளிக்கும் பணிகளை ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.
முன்னதாக, முகாம் நடக்கும் இடம், எந்தெந்த அட்டைதாரா்கள் எந்தெந்த நாளில் முகாமில் பங்கேற்பது போன்ற விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதற்கான எழுத்துப் பணியை ஜூலை 18-ஆம் தேதி தொடங்க வேண்டும். மேலும், முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலைக் கடைளில் தமிழில் பலகை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவா் தெரிவித்துள்ளாா்.
