கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மனைவிக்கு அரசு பணி நியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த சூசைபாண்டியா புரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ)பணியாற்றி வந்தார். இவர் பணியிலிருந்த போது கடந்த 25.4.2023 அன்று மணல் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து , அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஏ.லூர்து பிரான்சிஸ் மனைவி பூபோன்சிட்டாள் என்பவருக்கு முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் சிறப்பினமாகக் கருதி கருணை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் இளநிலை வருவாய் ஆய்வாளராகப் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.
