• June 8, 2025

மதம் சார்ந்த விழாக்களில் கனிமொழி எம்.பி.பாரபட்சம் – கவர்னர் தமிழிசை  

 மதம் சார்ந்த விழாக்களில் கனிமொழி எம்.பி.பாரபட்சம் –  கவர்னர் தமிழிசை  

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம்  தூத்துக்குடிக்கு தெலுங்கானா கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஆன்மிகம் நம் நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டுகிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் எல்லோருக்கும் பாரபட்சமில்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு (பனிமயமாதா கோவில்) அதிக பேருந்துகளும் ரெயில்களும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இங்கு திருச்செந்தூர் உள்ளிட்ட எல்லா வழிபாட்டு தலங்களும் உள்ளன. எல்லா விழாவிற்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தால் மகிழ்ச்சி. இத்தகைய ஏற்றத்தாழ்வும் பாராபட்சமும் இருக்கக் கூடாது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பேசுவது என்றாலே தவறு என்ற ஒரு எண்ணம் இருக்கக் கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது கிடையாது. இந்த பாரபட்சம் இல்லாத ஒரு ஆன்மிக நிலை நமக்கு இருக்க வேண்டும். 

பிரதமர் சொல்வது போல நமது ஆன்மிகம் இன்று உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அதிக கோயில்கள் இருக்கும் இடமாக தமிழகம் இருப்பது மகிழ்ச்சி. கஞ்சாவை இளைஞர்கள் பயன்படுத்துவதை  பார்த்திருக்கிறோம். கஞ்சாவை எலிகள் சாப்பிடுகிறது. தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் இப்போது கஞ்சாவை தேடி போலீஸ் நிலையத்திற்கு வருகிறது.

நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிப்பதால் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்து விட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்பது இப்போது தமிழகத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. எலிகளை கஞ்சாவிடம் இருந்து எப்படி பாதுகாப்பது என்ற பிரச்சனையும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 படிக்காதவருக்கு பி.எச்.டி.யில் இடம் கொடுத்துள்ளனர் பல்கலைக்கழகங்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமர் ஒரு வருடத்தில் ஒரு கோடி மரம் நட வேண்டும். பிளாஸ்டிக்கில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறி  உள்ளார்.

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. இது ஒரு மதத்தினருக்கு எதிரான சட்டம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும் என்று சமூக நீதிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

சமூக நீதிதான் பொது சிவில் சட்டம். பொது சிவில் சட்டம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு சட்டம். இது தவறாக முன்னிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் கூறினார்.

அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி கேட்டபோது, இருகரம் உயர்த்தி கும்பிட்டபடி எதுவும் பதில் அளிக்காமல்   புறப்பட்டுச் சென்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *