தீக்குச்சி ஆலை தீவிபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு நிவாரண தொகை; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் செயல்பட்டு வந்த அப்பனேரியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊராணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் (வயது 70) என்ற பெண் உயிரிழந்தார். கனகராஜேஸ்வரி என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ விபத்தில் பலியான மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வழங்கினால் மட்டும் தான் உடலை வாங்குவோம் என்று மாரியம்மாளின் உறவினர்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ‘
இதையெடுத்து ஆலை நிர்வாகம் உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் மற்றும் இறுதி சடங்கு செய்ய 50 ஆயிரம் என 4 லட்சத்து 50 ஆயிரம் வழங்குவதாக கூறியதை தொடர்ந்து அவரது உடலை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் தீவிபத்தில் பலியான பெண்ணுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி வட்டம் சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில். மாரியம்மாள், க/பெ.தங்கவேல் (லேட்) (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும். கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா (லேட்) (வயது 49) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
