தூத்துக்குடியில் 4 இடங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பு ; கனிமொழி எம்.பி.தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஆக்கி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன பள்ளி, கல்லூரி மாணவ மாணவிக்கான ,மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டன இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தருவை மைதான விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
திமுக குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டையன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பல்வேறு தடைகளை தாண்டி தான் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறார்கள் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆக்கி, சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகளில் தேசிய அளவிலான மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று மாணவ மாணவியர் சாதனை படைத்து வருகிறார்கள்.இதுபோல் ஏராளமானோர் சாதனை படைக்க வேண்டும்.
20 ஆண்டுகளாக விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தான் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளையாட்டு பயிற்சியாளர்கள் 90 பேரை நியமனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி விளையாட்டு துறைக்கு என முன்னுரிமை அளித்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் விளையாட்டு துறையில் நடைபெற்று வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு விளையாட்டு வீரர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்.
தூத்துக்குடியில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் இறகு பந்து மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான உள் விளையாட்டரங்கம் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரங்கங்கள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி.பேசினார்.
முன்னதாக பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி மல்லர் கம்பம் வீர விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டி பார்வையாளர்களை கவர்ந்தனர் அவர்களுக்கு பரிசுகளும் ரொக்க பரிசும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
