• June 8, 2025

செந்தில்பாலாஜி வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி திடீர் விலகல்

 செந்தில்பாலாஜி வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி திடீர் விலகல்

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், திமுகவினர், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி மனைவி அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட வில்லை எனவும் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

இந்த மனு பட்டியலிடப்பட்டால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, இந்த சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை.

நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்துள்ளார். நிர்வாக ரீதியாக முடிவெடுக்க வேண்டி உள்ளதால் மாலை 4 மணிக்கு மேல் முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *