அடிப்படைகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்கள், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கோஷமிட்டனர். இதில், எட்டயபுரம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் ஆத்திகுமார், மாவட்ட துணை தலைவர் ஆர்.பி.பாலு, மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் எத்திலப்பநாயக்கன்பட்டி, பொம்மல்நாயக்கன்பட்டி, போடப்பநாயக்கன்பட்டி, முருங்கப்பட்டி, கோடாங்கிபட்டி, இரகாமுநாயக்கன்பட்டி, கோரல்சின்னவநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம ஊராட்சி உட்பட்ட எந்த கிராமத்திலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

மஞ்சநாயக்கன்பட்டியில் சாலைகளை புதுப்பிக்க தோண்டப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் இதுவரை சாலை பணிகள் நடைபெறவில்லை. தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. தெருக்களில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்து தருவதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதார பணிகளும் நடைபெறவில்லை. எனவே செயல்படாமல் இருக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
