கோவில்பட்டி வந்த “அரிசி கொம்பன்” யானைக்கு ஸ்பெஷல் குளியல் ஏற்பாடு

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வராம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை தேனியில் இருந்து லாரியில் ஏற்றி அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது. கம்பத்தில் இருந்து தேனி, உசிலம்பட்டி, விருதுநகர் வழியாக கோவில்பட்டி வந்தது. நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதிக்கு மதியம் லாரி வந்தது.

அப்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மயக்க நிலையில் இருந்த “அரிசி கொம்பன்” யானை சோர்வடைந்தது. இதனால் வெப்பத்தை தணிப்பதற்கு ஸ்பெஷல் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கபட்டது,. உடனடியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் இருந்த அரிசி கொம்பன் யானையை குளிர்வித்தனர் .
மயக்க நிலையில் இருந்தாலும் சற்று ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர், பின்னர் அங்கிருந்து நான்கு வழி சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் களக்காடு நோக்கி புறப்பட்டு யானையுடன் லாரி சென்றது.
