தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தில் சமையலர் பணிக்கு ஆட்கள் தேர்வு ; ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 56 அரசு ஆரம்பபள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மீதமுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. காலை உணவு செய்வதற்கு சமையலராக தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதாகும். குறைந்தபட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைய வசதியுடன் கூடிய “ஆண்ட்ராய்டு போன்’ வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சுயஉதவிக்குழு /ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு/ பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருக்க வேண்டும். அதே கிராம ஊராட்சி/நகர்ப்புற பகுதியில் வசிப்பவராக, பெற்ற கடனை தவறாது நிலுவையின்றி செலுத்தி இருப்பவராக இருக்க வேண்டும்.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் குழந்தைகளின் அப்பள்ளியில் படிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுவில் போதுமான நிதி இருப்பினை கொண்டிருக்க வேண்டும். சமையலர் பதவிக்கு தேர்வு செய்ய கையூட்டு பணம் கேட்பதாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
