டி.ஆர்.பாலு மகன் ராஜா, புதிய அமைச்சராக பதவி ஏற்பு

பால்வளத்துறை அமைச்சராக இருந்து ஆவடி நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இன்று தமிழகத்தின் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான ராஜா மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானவர்.
டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சாக பதவியேற்றப்பின் ராஜ்பவனில் கவர்னருடன் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. *
அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *
தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
