இயக்குனரும் நடிகருமான மனோ பாலா மரணம்

சினிமா இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று பகலில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.
ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து இதுவரை மனோபாலா 40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர், 3 தொலைக்காட்சி திரைப்படங்களை இயக்கி உள்ளார்,
100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கி உள்ளார். 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது.விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள். 1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் மல்லுவேட்டி மைனர் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படம் வெளிவந்தது. முற்றுகை 1993 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது.
இவர் சமீபத்தில் தனியார் டி.வி.நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
கடந்த ஒரு மாதமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
