கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தொழில் நகரமான கோவில்பட்டியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நகரின் ஒரு இடத்தை கூட மிச்சம் வைக்காமல் அத்தனை இடத்திலும் ஆக்கிரம்புகள் பெருகி உள்ளன,
கோவில்பட்டி பசுவந்தனை சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது 10.5 மீட்டர் அகலத்தில் உள்ள இச்சாலை 14 மீட்டர் அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடங்கினர். இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.. பாரபட்சமில்லாமல் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி ஆக்கிரமிப்பில் இருந்த கடையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசுவந்தனை சாலையில் பல கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அவற்றை முறையாக அளவீடு செய்து, அந்த கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.. அதற்கு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அளந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இப்பணியானது தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.
மேலும் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் மேம்பாலம் முதல் லட்சுமி ஆலை மேம்பாலம் வரை உள்ள பிரதான சாலை, மந்தித்தோப்பு சாலை , கடலையூர் சாலை ஆகியவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில் மருத்துவமனைகள் நிறைய உள்ளன, இந்த சாலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் பெருகி சாலை சுருங்கி விட்டது. இதனால் இந்த சாலையில் அவசர மருத்துவ உதவிக்கு வரும் வாகனங்கள் வருவதற்கும் மிகவும் சிரமப்படுகிரார்கள். எனவே அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
