தந்தை- மகன் புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டார்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வழக்கறிஞர் எம்..எம்..கோபி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கலந்து கொண்டு பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் மறுக்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை கொடுக்காமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியில் தான்.
நடுநிலையோடு செயல்பட வேண்டிய பேரவை தலைவர், பேரவை மாண்பையே சிதைக்கும் விதமாக செயல்படுகிறார்.பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்வதை கடந்து, பேரவை உறுப்பினர் உதயநிதியின் மகளுக்கு பேரவையில் வாழ்த்து சொல்வதன் மூலம் பேரவை தலைவரின் மாண்பை சிதைத்து விட்டார்.
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கிவிட்டு, அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு பாஸ் கேட்டால் அமித்ஷாவின் மகனிடம் கேட்க சொல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு 3 மாடங்களின் டிக்கெட்டுகளை யாருக்காக புக் செய்து வைத்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் தான் விளையாட்டில் கூட அரசியல் கலந்திருக்கிறது.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் பேச வாய்ப்பு மறுக்கும் பேரவை தலைவர் தந்தை மகன் புகழ் பாடுவதற்கு மட்டும் வாய்ப்பளித்து புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.,
