திருநெல்வேலி சரகத்தில் 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பெரும் தென்காசி மாவட்டத்தில் 20 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பேர் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 779 பேர்களுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெற்றும், நன்னடத்தை பிணையை மீறிய 19 பேர் மீது பிணை முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2677 பேர்களுக்கு எதிரான பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1050 பிணையில் விடமுடியாத பிடியாணை நிறைவேற்றியுள்ளனர்
நடப்பாண்டில் இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 எதிரிகள் கைது செய்ய்பபட்டுள்ளனர். அவர்களுள் 23 எதிரிகள் குண்டர் தடுப்பு காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 320 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு, அதில் நன்னடத்தை பிணையை மீறிய 5 எதிரிகள் மீது பிணை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கு குற்றவாளிகளது, ரூ. 8,21,068/- மதிப்பிலான 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 46% குற்றவழக்குகள் புலன்விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 55% களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை இரண்டு ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, 37 வழிப்பறி, 56 வீட்டை உடைத்து திருடிய குற்றம் மற்றும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59% குற்றவழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 54% களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
