தூத்துக்குடி சுங்கசாவடி கட்டண உயர்வை கண்டித்து டிரைவர்கள் போராட்டம்
நாடு முழுவதும் மத்திய அரசு 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகைகுளம், கயத்தாறு சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5-ம், லாரிகளுக்கு ரூ.20-ம், 3 ஆக்சில் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.30-ம், மல்டி ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள் ஒரு முறை கடந்து செல்ல ரூ.120-ம், அந்த வாகனங்கள் 24 மணி நேரத்துக்குள் சென்று விட்டு திரும்பி வருவதற்கு ரூ.180-ம், மாத கட்டணமாக (50 தடவை செல்ல) ரூ.4,030-ம் என உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் கணிசமாக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
மேலும் இதனால் விலைவாசி உயரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி முன்பு அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை சார்பில் போராட்டம் நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் பட்டாணி, மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.