ஓ. பன்னீர்செல்வம் மனுக்கள் தள்ளுபடி ; எடப்பாடி பழனிசாமி அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆனார்

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டவழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி ஓ. பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.
அ.தி.மு.க.-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “8 மாதங்களுக்கு பின் தாமதமாக தொடரபட்ட வழக்குகள் என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 19ஆம் தேதி விசாரணையின்போது, அனைத்து தரப்பும் 22ஆம் தேதி வாதங்களை முன்வைக்கவும், வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை பொது செயலாளர் தேர்தலின் முடிவை வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதனை ஏற்று அனைத்து தரப்பிலும் அன்றைய தினம் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில், ஓ . பன்னீர்செல்வம் தரப்பினர் 24ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்குகளில், நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்தார். அதன்படி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை முழுவதுமாக தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இதன்மூலம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீர்ப்பு வெளியானதையடுத்து, தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என அறிவித்து அறிவிப்பு வெளியிட்டனர்.
வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி “தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துவிட்டனர். ஒருமனதாக அ.தி.மு.க.விற்கு நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.
தீர்ப்பையடுத்துதமிழ்நாடு முழுவதும் அ. தி. மு. க. தொண்டர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
