தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது:-
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் மீனவ பிரதிநிதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக, நல்லதொரு சூழல் உருவாகும்.
மேலும், மீன் பிடி துறைமுகத்தில் உள்ள குறைகளான, குடிநீர் வசதி, கழிப்பறை, மற்றும் பல்வேறு குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். புதியதாக அமைக்கப்பட்டு இருக்கும் படகு நிறுத்தம் இடம், மே இறுதிக்குள் பணிகள் முடிந்து மீன்பிடி தடைகாலம் முடிவுற்ற பின் திறக்கப்பட்டு படகுகள் நிறுத்தப்படும்.
மேலும், தூத்துக்குடி நகரம் பகுதி முழுவதுமாக 22 பனிக்கட்டி தயாரிக்கும் பகுதி இருக்கிறது. இதில், துறைமுகத்தில் உள்ள பனிக்கட்டி தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.
