நகைசுவை நடிகர் மயில்சாமி இறுதி ஊர்வலம் – பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதான மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் தொடங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றனர்.
வழிநெடுக பொதுமக்கள் நின்று மயில்சாமி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.வடபழனி மின்மயானத்தில் இறுதி ஊர்வலம் சென்றடைந்த பிறகு மயில்சாமி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்
நடிகர் மயில்சாமி என்றால் நல்ல மனிதர், நல்ல குணம் கொண்டவர், வாரி வழங்கும் வள்ளல் என்றுதான் முதலில் கூறுகிறார்கள். அதன் பிறகுதான் அவரது நடிப்பு, மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பு இதெல்லாம்! ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.
எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி மேலே வந்தவர். தன்னை போல் திறமையுடன் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பார்.
சிவபக்தரான அவர் எப்போதும் யாரை பார்த்தாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்து செல்வார். சிவனடியாராகவே மாறி தொண்டு செய்து வந்தார். அதோடு மழை, புயல், வெள்ளம் காலங்களில் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் ஏழை மக்கள் வயிறார உணவு சாப்பிடுகிறார்கள் என்றால் அது மயில்சாமி கொடுத்த உணவாக இருக்கும்.
வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் நடுவில் வாழும் காலத்தில் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைப்பார். அதை கொள்கையாகவே நினைத்து வாழ்ந்தவர்
மயில்சாமி. மயில்சாமியின் வீட்டின் முகப்பில் நல்லவன் வாழ்வான் என்ற வாசகமும் மறு புறம் அன்பே கடவுள் இல்லம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அது போல் அவரது வீட்டில் பெரிய சைஸில் விநாயகர் படமும் வைக்கப்பட்டுள்ளது. நல்லவன் வாழ்வான், அன்பே கடவுள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவம் ஆகும்.
இவரது உதவும் குணத்தை பார்க்கும் பிறர் தாமும் வாழ்வில் இப்படி உதவலாம் என்ற ஒரு இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்திவிட்டார் மயில்சாமி என்றே சொல்லலாம். ஒரு ஆர்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக வேட்டியை கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக தெரு ஓரம் உள்ள கடைகளில் டீ குடிப்பார் என்கிறார்கள்.
