நாளை மகா சிவராத்திரி; சிவாலயங்களில் இரவு முழுவதும் பூஜை-வழிபாடு நடக்கிறது

மகா சிவராத்திரி நாளில் சிவனின் அருளை பெறுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு அளிக்க வேண்டும். செய்யக் கூடாதவைகள் என சில விஷயங்கள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளை மீறுவது பாவங்களை சேர்க்கும். அப்படி மகா சிவராத்திரி நாளில் நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
மனதை முழுவதுமாக இறைவனிடம் ஒன்றி இருக்க செய்வதும், நமக்குள் இறைத்தன்மையை உணரச் செய்வதுமே விரதங்களின் நோக்கமாகும். இந்துக்களால் பல விரதங்கள் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில விரதங்கள் மட்டுமே அதி விசேஷமானதாக கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் மகா சிவராத்திரி விரதம்.
ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறையில் வரும் சதுர்தசியில் கொண்டாடப்படுவது மகாசிவராத்திரி திருநாள் ஆகும்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளைய (18-ந்தேதி சனிக்கிழமை) வருகிறது. மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து சிவ பூஜை செய்து சிவனை வழிபட வேண்டும் என்பது நியதி.
சிவாலயங்களில் நடைபெறும் பூஜை நேரம் வருமாறு:-
முதல் கால பூஜை – இரவு, 6:30- 9:30 மணி இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30 மணி ; மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30 மணி , நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 மணி ..

மகா சிவராத்திரி விரதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் கர்ப்பிணிகள், மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், வயதானவர்கள் போன்றோர் தங்களின் உடல்நிலையை பொருத்தும், டாக்டரின் ஆலோசனையை பெற்றும் விரதம் இருக்கலாம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளானது சனிப்பிரதோஷத்துடன் இணைந்த நாளில் வருகிறது. அதனால் அன்றைய தினம் நாள் முழுவதும் நடராஜர் பத்து, கோளறு பதிகம், திருவாசகம், லிங்க அஷ்டோத்திரம், சிவ புராணம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். பஞ்சாட்சர மந்திரம் உச்சாடனம் செய்யலாம். ஆனால் மகா சிவராத்திரி அன்று கண்டிப்பாக செய்யக் கூடாதவை என சில விஷயங்கள் உள்ளன.

மகா சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகள் எதையும் சாப்பிடக் கூடாது. எந்த காரணத்திற்காகவும் பகலில் தூங்கக் கூடாது. மது, புகைபிடிப்பது போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தக் கூடாது. அசைவம் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. பூண்டு, வெங்காயம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
மகா சிவராத்த்திரி அன்று திருநீறு அணியாமல் வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. கோபப்படுவது, பொய் சொல்வது, பிறரை ஏமாற்றுவது, பிறர் மனம் நோகும் படியான வார்த்தைகளை பேசுவது கூடாது. தேங்காய் தண்ணீர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக் கூடாது. இளநீர் மட்டுமே அபிஷேகத்திற்கு ஏற்ற பொருளாகும்.
* பிப்ரவரி 18 ம் தேதி(நாளை) அதிகாலையில் எழுந்தது முதலே உபவாசத்தை துவங்கி விட வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து, பிப்ரவரி 19 ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு பிறகே உணவு சாப்பிட வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் விரதத்தை பாதியில் கடைவிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.
* பாரனை செய்வதற்காக சொல்லப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக விரதத்தை நிறைவு செய்யக் கூடாது.
* சினிமாவிற்கு செல்வது, டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது ஆகியவற்றை செய்து இரவு நேரத்தை கழிக்கக் கூடாது.
* விரதம் இருப்பவர்கள் தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம் என்றாலும் உடலை வருத்தும் கடுமையான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

