தூத்துக்குடி அனல்மின்நிலைய தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி.கடிதம்

மத்திய நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோதி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோருக்கு கனிமொழி எம்.பி.அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
எனது தூத்துக்குடி தொகுதியில் உள்ள என்டிபிஎல் அனல்மின்நிலைய தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தில் 91 நிரந்தர ஊழியர்கள் உட்பட 1500 பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
என்எல்சி அனல் மின் நிலையம் என செயல்படுகின்ற போதிலும் தூத்துக்குடியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நெய்வேலி தொழிலாளர்களை விட 20 முதல் 40 சதவீதம் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் தடை ஆணை பெற்றுள்ளது என்றாலும் தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறைகள், போனஸ், கொரோனா விடுப்பு, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகள், இதர அடிப்படை வசதிகள் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு விரைவாக தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு கனிமொழி எம்.பி.கூறி இருக்கிறார்.
