கோவில்பட்டியில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை, மீண்டும் அமைக்ககோரி தே.மு.தி.க.வினர் குடைபிடித்து ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்புறம், ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றிவிட்டனர்.
சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் மீண்டும் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ- மாணவிகள், பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது.
எனவே விரைந்து பயணிகள் நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்
ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில மகளிர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் சுபபிரியா, மாவட்ட அவைத் தலைவர் கொம்பையாபாண்டியன் , கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள்சாமி(மேற்கு), பொன்ராஜ்(கிழக்கு), நகர அவைத்தலைவர் ஆழ்வார்சாமி, மாவட்ட பிரதிநிதி மதிமுத்து, நகர பொருளாளர் பிரசன்னா, நகர துணை செயலாளர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
