கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்; ஆதரவு தெரிவித்து ஓட்டல், நகை, ஜவுளிக்கடைகள் மூடப்பட்டன

கோவில்பட்டி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த காட்சி
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்..
இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டுக்குள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும்நடவடிக்கையில் இறங்கினர். இதை கண்டித்து வியாபாரிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட 3 கடைகள் திறந்து விடப்பட்டன.
இந்த நிலையில்) நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும். தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் , இன்று (புதன்கிழமை) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் இன்று அறிவித்து இருந்தனர்,


அதன்படி இன்று காலை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மார்க்கெட் திறக்கப்படவில்லை. இரண்டு வாயில் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. =வெளியூர்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிய லாரிகள் எதுவும் வரவில்லை. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
மார்க்கெட் வியாபார்கள் போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இதன் காரணமாக மார்கெட் வெளிப்புற சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதேபோல் மார்க்கெட்டின் பின்புற வாசல் பகுதியில் உள்ள கடைகளும் மூடி இருந்தன,
மேலும் கிருஷ்ணன் கோவில் தெருவில் நகைக்கடைகள் மற்றும் பாத்திர கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம், மெயின் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகள் , பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன, ஜவுளி கடைகள் மூடி இருந்தன.
கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை சீரமைப்பு பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி நகர்மன்ற அலுவலகத்தில் கோட்டாட்சியர் மகாலட்சுமி, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகர் மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி, தாசில்தார் சுசிலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரமேஷ்குமார், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
