திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 1-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 பவுன் தங்க நகை திருட்டு போனது.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26. -ந்தேதி திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருட்டு போனது,
மேலும் சாத்தான்குளம் இடைச்சிவிளையைச் சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவர் கடந்த 26ந்தேதி திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருட்டு போய் உள்ளது.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திருநெல்வேலி பாலபாக்கிய நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி ராமலட்சுமி (எ) பேச்சியம்மாள் (60) மற்றும் திருநெல்வேலி குமரேசன் காலனியை சேர்ந்த சண்முகம் மனைவி கல்யாணி (எ) கலா (49) ஆகிய இருவரும் சேர்ந்து தங்க நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவகளிடமிருந்த ரூ.1லட்சத்து 70ஆயிரம் மதிப்புள்ள 5½ சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதியாகி உள்ளன, கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைககளை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
