கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 63 நாயன்மார்கள், மாணிக்கவாசக, உற்சவ மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம்-திருவீதி உலா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்கள், தொகையடியார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு கற்சிலை விக்கிரகங்கள் மட்டுமே இருந்து வந்தன.
இந்நிலையில், கோவில்பட்டி திருமுறை மன்றம் சார்பில் 2014ஆம் ஆண்டு 63 நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இந்த உற்சவ திருமூர்த்திகளின் 9ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னர், 10 மணி முதல் 12 மணி வரை 63 நாயன்மார்கள், தொகையடியார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு மேல் மாஹேஸ்வர பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு திருமுறை பாராயணம், 5.30 மணிக்கு வாணாசுரன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. , இரவு 7 மணிக்கு ஸ்ரீ அப்பர் அடிகள் உழவாரப்பணி திருக்கூட்டத்தின் கைலாய வாத்தியம் மற்றும் நாதஸ்வர இன்னிசையுடன் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது
விழாவில் திருமுறை மன்றத் தலைவர் கூடலிங்கம் ஜி.ஆறுமுகச்சாமி, செயலர் நெல்லையப்பன், பொருளாளர் சிவானந்தம், முன்னாள் அறங்காவலர் உறுப்பினர் திருப்பதி ராஜா, கோயில் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.