• May 20, 2024

இரட்டை இலை சின்னம்: எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

 இரட்டை இலை சின்னம்: எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

 நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் என்றும், இடைக்காலப்பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது எனவும் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக்கோரியும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஸ்வரி அமர்வில் பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 30-ம் தேதி முறையிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால்,விரைந்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *