• June 8, 2025

சென்னை மெரினாவில் குடியரசுதின கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடியேற்றினார்;அண்ணா பதக்கங்களை முதல்- அமைச்சர் வழங்கினார்

 சென்னை மெரினாவில் குடியரசுதின கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடியேற்றினார்;அண்ணா பதக்கங்களை முதல்- அமைச்சர் வழங்கினார்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.

இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றினார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.


அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைக்காவலர் சரவணன், வேலூர், செவிலியர் ஜெயக்குமார், பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையங்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றன.

காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவடைந்தது. பின்னர் விழா மேடையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வழி அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *