• June 7, 2025

சிங்கப்பெருமாள் கோவில்- சிறந்த பரிகாரஸ்தலம்

 சிங்கப்பெருமாள் கோவில்- சிறந்த பரிகாரஸ்தலம்

திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனி தசை, ராகு தசை நடப்பவர்களுக்கும் சிறந்த_பரிகார_ஸ்தலமக சிங்கபெருமாள் கோவில் விளங்குகிறது.

நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது.

ஜாபாலி என்னும் மகரிஷி, பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார்.

இவர் பாடலாத்ரி_நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலை மீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை தொங்க விட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார்.  நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.

ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம்.

பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது.

கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனி தசை, ராகு தசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாத சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் .

இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

மூலவர் பாடலாத்ரி நரசிம்மர்,
உற்சவர் பிரகலாதவரதர்,
அம்மன்/தாயார்  அஹோபிலவல்லி,
தல விருட்சம் பாரிஜாதம்,
தீர்த்தம் சுத்த புஷ்கரிணி.

கோவில் முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற அமைப்பில் 2 முழு தூண்களும் சுவரை ஓட்டி  2  தூண்களும் காணப்படுகின்றன

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வெளிப்புற சுற்று மலை சுற்றாக அமையும் கோவிலின் வெளிப்புறத்தில விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிலை மேனிகளாக காணப்படுகின்றன.பக்கவாட்டு சுவரில் ஸ்தல வரலாறு குறிக்கப்பட்ட குறிப்பும் காணப்படுகின்றது

அதை தாண்டி ஆலய மண்டபத்திற்கு வந்தால் மூலவர் உற்சவர் சன்னதிக்கு போகும் வழி காணப்படுகிறது

அதன் வழியாக மூலவராகிய நரசிம்மர் சுகாசனத்தில் நான்கு கைகளில் கதையுடனும்,  வல பின் கையில் சக்கரமும்,  இட பின் கையில் சங்கும் கொண்டு,  வல முன் கை காக்கும் முத்திரையிலும்,  இடது கை முன் தொடையிலும் அமைந்தவாறு,  வலது காலை மடித்துக் கொண்டு, கீழே நீட்டப்பட்டுள்ள  இடது காலை தாமரை மலர் மேல் வைத்துக் கொண்டு #த்ரிநேத்ரதாரியாய் (மூன்று கண்களுடன்) திரு மார்பில் மகா லஷ்மியோடு, சாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாத மாலை மற்றும் லஷ்மிஹாரங்நாம மாலை மற்றும் லஷ்மி ஹாரங்களுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

பாடலாத்ரி நரசிம்மரின் உற்சவரின் திருப்பெயர் ஸ்ரீ பிரகலாத வரதர், ஸ்ரீ தேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். வரதரின் பின் கைகள் சங்கு சக்ரம் ஏந்திய நிலையில் வலக்கை காக்கும் அமைப்புடனும் இடக்கை கதையுடனும் தேவியர் ஒருகையை நெகிழ்வாகவும் மற்றொரு கையில் மலர்களை கொண்டுள்ளனர்.

எல்லாம் தரிசித்துவிட்டு வெளி வாயிலுக்கு வரும் போது,  நமக்கு பிடித்தமான கோயில் பிரசாதங்கள் புக் மற்றும் பாடல்கள் எல்லாம் கொண்ட ஸ்டால் இருக்கு. 
ஒரு பெரிய பாறை மேல  இந்த கோவில் இருக்கு. அந்த பாறை மேல ஏறிக்கிட்டே  இந்த கோவிலின் #ஸ்தல_வரலாறை சிறிது பார்ப்போமா?!

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அநேகமாக நரசிம்ம சுவாமி எல்லா முக்கிய திருத்தலங்களிலும் பல ரூபத்தில் எழுந்தளியிருக்கிறார். இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம். ஆகையால் பலராலும் வற்புறுத்தியும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இரணியனானவன் சாகாவரம் பெற்றிருந்தான். இறப்பு என்பது அவனுக்கு பகலிலும் நேரக்கூடாது. இரவிலும் நேரக் கூடாது, வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நேரக்கூடாது. வெளியேயும் நேரக் கூடாது. ஆகாயம், பூமி, நெருப்பு, நீர், காற்று இவற்றினாலும் இறப்பு கூடாது. ஆயுதம், மிருகம், மனிதன் எதனாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்ற மிகப் பெரிய சாகா வரத்தை பெற்றிருந்தான்

பிரகலாதன், இறைவன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவானவர் சிறுபாலகனின் ஆணித்தரமான #இறைவன்_எங்கும்_உள்ளான் ன்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நரங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.

அது சமயம் அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார். இத்திருக்கோவிலைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருந்தார். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன் இந்த திருத்தலத்தில் சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக  புராணத்தில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இதில் கிழக்கு முகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது

சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

தெய்வீக அதிசய குணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு. அதைப் பற்றி நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும்( இந்த மூணுல எதுமே செட்டாகலையே! அப்புறம் நீ ஏன் போனேன்னு கமெண்ட்ல கலாய்க்க கூடாது!!. ) தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

இங்கு காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் எனப் பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

மலையை சுற்றி வரும்போது மேலே ஒரு பலிபீடம் அமைந்துள்ளது. அங்கே இருந்து பார்த்தல் கோவிலின் கொடிமரம் மலைகளின் பின்னணியில் அழகாக காட்சி தருகிறது.

மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது என்பது சிறப்பம்சம். பின் நாம் படி இறங்கி வரும்போது நேரே இலட்சுமி நரசிம்மர் வீற்று இருக்கிறார்.

இறைவனின் இடது தொடையில் அமர்ந்து இருக்கிற லட்சுமி தேவியின் இடது கையில் தாமரையும் வலக்கை நரசிம்மரின் இடுப்பை சுற்றிய நிலையில் காணப்படுகிறது. நரசிம்மரின் பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்த வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை இறைவியை அணைத்தவாறே காணப்படுகிறது.

அவரை வழிபட்டு மலையை சுற்றி முடித்து கீழே வரும் போது ஒரு மண்டபம் காணப்படுகிறது.

அதில் அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
கோவிலை விட்டு வெளியே வரும்போது கோவிலின் வெளியே ஒரு நாற்கால் மண்டபம் காணப்படுகிறது
காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இத் திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *