அண்ணாமலைக்கு `இசட் ‘பிரிவு பாதுகாப்பு; மத்திய அரசு முடிவு

தமிழக பா.ஜனதா கட்சி தலைவராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்தார்.
பின்னர், எல்.முருகன் மத்திய இணை மந்திரியானதை அடுத்து அந்த பொறுப்புக்கு மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியல் மூலம் பா.ஜ.க.வை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தற்போது `ஒய்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு `இசட் ‘ பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
