கோவில்பட்டியில் பயங்கரம்: இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் அதிகாலையில் வெட்டிக்கொலை

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் ரோட்டில் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30) என்பவர் இருசக்கர வாகன காப்பக் நடத்தி வந்தார், நேற்று இரவு ஆனந்தராஜ் வாகன காப்பகத்தில் இருந்துள்ளார்.
நள்ளிரவுக்கு மேல் வாகன காப்பகத்துக்குள் பிளாஸ்டிக் கட்டிலை விரித்து போட்டு அதில் உறங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர்.

அவர்கள் தூங்கிகொண்டிருந்த ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் ஆனந்தராஜ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இதைதொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர், போகும்போது ஆனந்தராஜ் உடலை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றனர்,
துப்பறியும் மோப்ப நாய் மூலம் துப்பு துலக்ககூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். வெகு நேரம் கழித்து ஆனந்தராஜ் கொலை பற்றிய தகவல் மேற்கு போலீசுக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து டி.எஸ்.பி.வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்க்ஸ்லி தேவ் ஆனந்த் , சப்[-இன்ஸ்பெக்டர்கள் அரிக்கண்ணன், அமலதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கட்டிலில் பிணமாக கிடந்த ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,. ஆனந்தராஜ் நடத்தி வந்த இருசக்கர வாகன காப்பகத்தை குத்தைகைக்கு எடுப்பதில் அவருக்கும் சகோதரருக்கும் ஏற்கனவே தகராறு இருந்த வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்த கொலை திட்டமிட்டு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
