கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி போராட்டம் :சமாதான கூட்டத்தில் தீர்வு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை கடை பிடிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், கோவில் மைதானத்தில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுதல், அரசியல் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தல், சேதம் அடைந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மராமத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் முன்பு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவையொட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுசிலா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி நாகலட்சுமி, இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் அய்யன்பெருமாள், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் கைவிட்டனர்
