காஷ்மீர்-கன்னியாகுமரி சைக்கிள் பயணம்: கோவில்பட்டி வந்த மத்திய அரசு ஊழியருக்கு வரவேற்பு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் ரவீந்தர் ரெட்டி மத்திய அரசின் கெயில் நிறுவனத்தில் கெமிக்கல் அனலிஸ்ட் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் உடல் வலிமை பேண வேண்டும், மன அழுத்தத்தை போக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், விளையாட்டுத்துறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணர்வு பாரத யாத்திரை சைக்கிள் பயணத்தை கடந்த மாதம் 29ந் தேதி ஸ்ரீ நகரில் இருந்து தொடங்கியுள்ளார்.
அரியானா, பஞ்சாப், டெல்லி,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா வழியாக தமிழகத்துக்கு வந்த ரவீந்திர் ரெட்டி இன்று கோவில்பட்டி வந்தடைந்தார். கோவில்பட்டியில் இருந்து கிளம்பி நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரியில் தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3700 கிலோமீட்டர் தூர பயணத்தை 22 நாட்களில் நிறைவு செய்கிறார். கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் நாலாட்டின்புதூர் நான்குவழிசாலையில் உள்ள சரவணபவன் ஓட்டல் முன்பு அவருக்கு உரிமையாளர் சீனிராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்..
தனது பயணம் குறித்து ரவீந்தர் ரெட்டிகூறியதாவது:-
தற்போது நான் விடுமுறையில் இருக்கிறேன். ஒவ்வொரு விடுமுறை காலத்தையும் பயனுள்ளதாக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் மூலமாக விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வருகிறேன். அனைவரும் உடல் வலிமையை பேண வேண்டும் , மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும், அதற்காக தினமும் உடற்பயிற்சி மேற் கொள்ள வேண்டும் , அனைவரும் விளையாட்டு துறையில் பங்கேற்க வேண்டும் என்பது என்பதனை வலியுறுத்தி 3700 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.. கோவில்பட்டி மக்கள் சிறப்பானவர்கள்., என்னுடைய விழிப்புணர்வு பயணத்திற்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்துள்ளனர். இந்த வரவேற்பின் மூலம் என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத ஊராக கோவில்பட்டி மாறிவிட்டது,
இவ்வாறு அவர் கூறினார்.
