இயற்கையும் , இன்சூரன்சும் கைவிட்டுவிட்டது- திசைமாறி பயணிக்கும் விவசாயிகள்: மக்காச்சோள பயிர்களை அரைத்து கால்நடை தீவனத்திற்கு விற்கிறார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தையொட்டி உளுந்து, பாசி,கம்பு, மக்கா, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி பருத்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர்,
ஆவணி மாத இறுதியில் பயிரிடப்பட்டு ஐப்பசி மாதம் பத்தாம் தேதி வரை மழை பருவத்திற்கு பெய்யாததால் அனைத்து பயிர்களும் பெயரளவில் வளர்ந்தது. இதனால் போதிய வளர்ச்சி இன்றியும் தெம்பின்றியும் பயிர்கள் காணப்படுகின்றன. இதனால் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் கடும் பாதிப்புக்குள்ளாகின.
மேலும் எந்தாண்டும் இல்லாத வகையில் பயிர்களை மான், பன்றிகள் முழுமையாக சேதப்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் தேசிய ஊரக வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, மக்காச்சோளம் பயிர்களை தாக்கும் குருத்துப்பூச்சி, போதிய மழையின்மை என பல்வேறு இடர்பாடுகளால். விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் செலவு செய்துவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். விதைத்து முளைத்து பயிராகி கதிர் பிடித்து மகசூல்.அறுவடை செய்த விவசாயிகள் தற்போது திசைமாறி பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
தற்போதைய நிலையில் உள்ள பயிரில் கதிர் பிடித்து அறுவடை செய்து வீடு வந்துசேர ஒரு ஏக்கருக்கு இன்னும் ரூ நாலாயிரம் வரை செலவாகும் என்பதால் மேலும் செலவு செய்ய வாய்ப்பு இல்லாததால் நிலத்தில் பசுமைதண்டுடன் கூடிய பயிர் கதிர் பால்கோர்த்த பருவத்தில் பயிரை அரைத்து கால்நடை தீவனத்திற்கு விற்கின்றனர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்து இங்கு விலைக்கு வாங்குகின்றனர். இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் விற்று வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பயிர் காப்பீடும் முறையாக வழங்கப்படவில்லை. நிலத்தில் முளைத்த ஆளுயுர பயிரை இயந்திரங்கள் வெட்டும் போது மனம் கலங்குகிறது. செய்த செலவில் ஓரளவாவது ஈடுகட்ட முடியுமா என்று கருத வேண்டியுள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் நஸ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு வேறு வழி தெரியவில்லை இயற்கையும் கைவிட்டது, இன்சூரன்சும் கைவிட்டுவிட்டது. பச்சிளம் குழந்தையை வளர்த்தவர்களே கழுத்தை நெறித்து உயிரை பறிப்பதுபோலாகிவிட்டது விவசாயிகள் நிலை.
இந்த நிலையில் 2021- 2022 பயிர்காப்பீட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும்.அரசாங்கம் விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
:
