ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம்:, விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற உதய்நிதி ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற உடன் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பதவி ஏற்புவிழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்,அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம்.அதை நிறைவேற்றும் வகையில் செய்ல்படுவேன்.ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படமே எனது கடைசி படம். இனி நடிக்க மாட்டேன்.அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி .
இவ்வாறு அவர் கூறினார்.