நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக் கொன்றவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ் மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4, 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இம்மானுவேல் அப்துல்லா கம்பால் மனைவி கன்னித்தாயை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கன்னித்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர, முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கன்னித்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள இம்மானுவேல் அப்துல்லாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
