தூத்துக்குடி- கோயம்புத்தூர் இடையே இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில்; தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல்

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று மதுரை மீளவிட்டான் ரெயில் நிலையம், மேம்பாலம் இருப்புப் பாதை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
“மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இரட்டை ரெயில் பாதை வருகிற பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முடிவடையும். மார்ச் 1ஆம் தேதி வெள்ளோட்டம் நடைபெறும்
தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் விடக்கோரி அதிக அளவில் மனுக்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பரிசீலனை செய்து, விரைவில் தூத்துக்குடி -கோயம்புத்தூர் இடையே ரெயில் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு ஆர்.என்.சிங் கூறினார்.
ஆய்வின் போது, கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்த், பொது மேலாளரின் தனிச் செயலாளர் செந்தமிழ் செல்வன், முதுநிலை பொறியாளர் பிரவீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
வர்த்தக தொழிற்சங்கத்தினர் சந்திப்பு

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் சந்தித்த தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு மற்றும் உறுப்பினர்கள் ஜெயந்த்தாமஸ், ஆர்.எல்.ரமேஷ் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும்,
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தொடுதுறை சிஸ்டம் மீண்டும் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து தொழிலதிபர்கள், வியாபாரிகள் வட மாநிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சாதாரண ரெயில் இயக்க வேண்டும், தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இரண்டு டிக்கெட் கவுண்ட்டர்கள் இயங்கி வந்தன. தற்போது ஒரு கவுண்ட்டர் தான் இயங்கி வருகிறது .இதனால் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் மூடப்பட்ட இரண்டாவது டிக்கெட் கவுண்ட்டரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
