மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் பெண் `சோப்தார்’ நியமனம்

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வர்.
அத்துடன் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளுக்கு உதவிகரமாக செயல்படுவார்கள். அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளுக்கு பெண் ‘சோப்தார்’களை நியமிக்கும் வகையில் 20 பெண்‘சோப்தார்’கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக லலிதா என்ற பெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார் .
அவரது சீருடையாக வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்து இருப்பார். நீதிபதியின் வருகையை உணர்த்தும் வகையில் செங்கோல் ஏந்தி செல்லும் சோப்தார்’ பணியில் மதுரை ஐகோர்ட்டை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர்.தற்போது முதல் முறையாக அந்த பணிக்கு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
